நாடாளுமன்றத்தில் – வக்ஃபு சட்டம் மீதான விவாதத்தில் – தயாநிதிமாறன் கண்டனம் !
மக்களவையில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து, நள்ளிரவைக் கடந்து நடைபெற்ற வக்ஃப் (திருத்த) மசோதா குறித்த கடுமையான விவாதங்கள் எழுந்தன.
ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த இந்த மசோதா, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் செயல்படும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் தயாநிதி மாறன் இந்த மசோதாவிற்கு எதிராக தீவிரமாக உரையாற்றினார்.
மசோதாவின் அரசியல் நோக்கத்தையும், முஸ்லிம் சமூகத்தின் மீதான அதன் தாக்கத்தையும் அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டி னார்.
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வின் ஆதரவு குறைந்திருப்பதையும், வெற்றிக்காக மத அரசியலைத் தூண்டும் உத்திகளையும் அவர் வெளிப்படுத்தினார்.
பா.ஜ.க. அரசு, தனது நண்பர்களான பெரிய தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், சிறுபான்மையினரின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் வலையை விரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அவருடைய உரை பின்வருமாறு:
இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இந்த வக்ஃப் மசோதாவை எதிர்த்து உரை யாற்றுகிறேன். இந்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு முக்கியக் காரணம் எண்ணிக்கைகளில் தெரிகிறது: 71, 62, 36. இவை என்னவென்று தெரியுமா?
2014இல் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வென்ற எம்.பி. இடங்கள் 71, 2019இல் 62, 2024இல் 36. 1990இல், ‘பாபர் மசூதியை இடிக்க வேண்டும், அங்கு ராமர் கோயிலைக் கட்ட வேண்டும், ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி 71 இடங்களைப் பிடித்தார்
கள். பின்னர் அவர்களின் செல்வாக்கு சரிந்து, 36 இடங்களுடன் ராமர் கோயிலைத் திறந்தார்கள்.
இஸ்லாமியர்களிடமிருந்து பாபர் மசூதியைப் பறித்ததோடு, இந்துக்களிடமிருந்து, குறிப்பாக ஏழை விவசாயிகளிடமிருந்து, சுமார் 4,500 ஏக்கர்களைப் பறித்தார்கள். விமான நிலையங்கள், சாலைகள், பணக்காரர்களுக்காக ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் கட்டுவதற்காக இதைச் செய்தார்கள்.
இதன் விளைவு என்ன? 2024 தேர்தலில் அயோத்தியில் வெற்றி பெற்றவர் யார்? சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் 56,811 வாக்குகளால் வென்றார். இதை அவர்களால் தாங்க முடியவில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பைத் தூண்டினால் மட்டுமே தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கி
றார்கள்.
அவர்களின் வெற்றிக்கு காரணம் வெறுப்பு, வெறுப்பு உணர்வு, பிரிவினை அரசியல் மட்டுமே.
நான் கேட்கிறேன், ‘ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாமா? இஸ்லாமியர்களைப் பற்றி வருத்தப்படுவது போல் நடிக்கிறீர்களா?’ தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக மசோதாக்களைக் கொண்டுவந்தது யார்? அமித் ஷா அவர்கள்தானே!
காஷ்மீர் மசோதாவைக் கொண்டுவந்ததும் அவர்தானே! அப்போது நாங்கள் கேட்டோம், ‘வட இந்தியாவுக்கு மட்டும் மசோதா கொண்டு வருகிறீர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் கொண்டு வரவில்லை?’ என்று. ஆனால் உங்கள் காதில் அது விழவில்லை.
உங்களுக்கு வந்தால் ரத்தம்எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
இன்று இந்த மசோதாவைக் கொண்டுவருகிறீர்கள். வக்ஃப் சொத்துக்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றனவா? இதனால் யார் கஷ்டப்படுகிறார்கள் என்று பாருங்கள்! ‘உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா?’ என்று கேட்கிறேன்.
ஏர் இந்தியாவை 16,000 கோடிக்கு விற்றீர்கள், ஆனால் அதன் கடன் 63,000 கோடி. உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி போன்றோருக்கு 4.5 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தீர்கள். அதற்கு மசோதா கொண்டுவரவில்லையே? இப்போது பெண்களுக்காக என்று சொல்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத் தலைவராக ஒரு பெண் இருந்திருக்கிறார். இப்போதும் இரண்டு பெண்கள் உள்ளனர். ஒருவர் தமிழ்நாடு முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் அப்துல் சமதின் மகள், முன்னாள் எம்பி. பெண்கள் ஏற்கெனவே இதில் இருக்கி றார்கள்; நீங்கள் புதிதாக எதையோ செய்வது போல் நடிக்கிறீர்கள்.
ஏன் இந்தப் பிரிவினை வாதம்?
உண்மையில், உங்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் வெற்றி வேண்டும். அங்கு வென்றால் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். வக்ஃப் நிலங்களைப் பார்த்தால், இந்தியாவில் 8,70,000 சொத்துக்கள், 9,40,000 ஏக்கர்கள், சுமார் 1.2 லட்சம் கோடி மதிப்பு உள்ளது. இதில் 25% உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதை விட்டுவிடுவீர்களா? ஏன் இந்தப் பிரிவினைவாதம்?
இந்த அரசு சிறுபான்மையருக்கு எதிராகவே செயல்படுகிறது. வாஜ்பாய் காலத்தில் ஒரு இஸ்லாமிய அமைச்சர் இருந்தார். இப்போது உங்களிடம் ஒரு இஸ்லாமிய கூட இல்லை.
நாங்களாவது முஸ்லிம்க ளுடன் கூட்டணி வைத்து, ராஜ்யசபாவில் முஸ்லிம் எம்பி வைத்திருக்கிறோம். இன்று ஒரு சிறுபான்மை அமைச்சரும் உள்ளார். நீங்கள் நல்லது எதையும் செய்யவில்லை.
முதலில் இஸ்லாமியர்களை ஒழித்தார்கள், அடுத்து கிறிஸ்தவர்களை ஒழிப்பார்கள், பின்னர் தலித்களை ஒழிப்பார்கள், பின் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.
நீங்கள் பசுத்தோலைப் போர்த்திய புலியைப் போல் மக்களை ஏமாற்றி, வாக்கு வங்கி அரசியல் செய்கிறீர்கள். இதைச் செய்யாதீர்கள். நன்றி, மிகவும் நன்றி, அவைத் தலைவர் அவர்களே, இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி.
இவ்வாறு அவர் உரையாற்றினார்
Comments
Post a Comment