மக்களவையில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா கண்டன உரை!
நாடாளுமன்ற மக்களவையில் கழகக் கொறடாவும் கழகத் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா அவர்கள் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா மீது உரை யாற்றும்போது ‘‘ஒன்றிய அரசின் வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் முதல் தீர்மானம் கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்’’ என்றும் ‘‘அரசியல் சட்ட மாண்புகளை படுகொலை செய்து இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் நாசிச செயலை நிறுத்த வேண்டும்’’ என்றும் கூறினார்.
இது குறித்து மக்களவையில் ஆ.இராசா அவர்கள் பேசியதாவது:–
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டை இங்கே எடுத்துரைக்க எனக்கு வாய்ப்பளித்த அவைத்தலைவர் அவர்களுக்கு நன்றி.
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதை முழு கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன். தனது துணிச்சலைப் பற்றி அவரே புகழ்ந்து கொண்டார். அவர் எப்படி இவ்வளவு ‘துணிச்சலுடன்’ நாடாளுமன்றத்தில் அதீத கற்பனை கட்டுக்கதைகளை (Cock and Bull Story) சொல்லிக்கொண்டிருக்கிறார் என நான் வியக்கிறேன்.
பதவி விலகவும் தயார்!
அமைச்சருக்கு நான் துணிச்ச லுடன் சவால் விடுகிறேன். நீங்கள் இன்று பேசியதை நாளை எழுத்து வடிவத்தில் எடுத்து வக்பு நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை குழுவிற்கு முன்பு அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஒப்பீடு செய்து பாருங்கள். இரண்டு பதிவுகளும் ஒத்துப் போகுமானால் நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவும் தயாராக இருக்கிறேன்.
உங்கள் கட்டுக்கதை உடைக்கப்பட்டுவிட்டது!
எது இந்த மசோதாவை கொண்டுவர உங்களை உந்தித்தள்ளியது என நீங்கள் இந்த அவையில் ஏற்கனவே கூறியதை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்த மசோதாவை முதலில் தாக்கல் செய்தபோது என்ன சொன்னீர்கள், தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வக்பு சொத்துக்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாக சொன்னீர்கள்; அவைகளை போன்ற லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்கவே இந்த மசோதா என்றும் சொன்னீர்கள். நாடாளுமன்ற கூட்டுக் குழு தமிழ்நாட்டிற்கு வந்தது. மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை செயலாளர், வக்பு வாரிய தலைவர் ஆகியோர் குழுவுக்கு முன்பாக வாக்கு மூலம் கொடுத்தார்கள். மூவரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவரை சந்தித்தார்கள். கூட்டுக் குழுவின் தலைவர் இந்த அவையில்தான் இருக்கிறார். ஆதாரங்களை அகற்றிவிட்டார்கள் எனும் உங்கள் கட்டுக்கதை உடைக்கப்பட்டுவிட்டது. உடனே இப்போது வேறு புதிய பொய்யான புனைவுக்கதையுடன் வந்திருக்கிறீர்கள்.
அவைத் தலைவர் அவர்களே, இங்கே வேடிக்கை இதுதான். நாடாளுமன்றத்தில் ஒரு இஸ்லாமிய உறுப்பினர்கூட இல்லாத ஒரு கட்சிதான் சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்பட ஒரு மசோதாவை கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் கட்சியிலிருந்து இந்த மசோதாவை ஆதரிக்க ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லை. ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினருக்குகூட வாய்ப்பளிக்க மனமில்லாதவர்கள்தான் மதச்சார்பின் மையை பாதுகாப்பது குறித்து எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். இன்று நமது இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நாள். மதச்சார்பில்லாத இந்த நாடு நம் சுதந்திர போராட்ட தியாகிகளும் அரசியல் சட்டத்தை உருவாக்கிய நம் தேசத்தலைவர்களும் சுட்டிக்காட்டிய வழியில் பயணிக்க போகிறதா அல்லது வகுப்புவாத சக்திகள் முடிவு செய்ததை போல் மனிதகுலத்திற்கு எதிரான போரை சந்திக்க போகிறதா எனும் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாள், இந்த நாள். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இச்சட்டம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குறிப்பிட்டு எனது உரையை தொடங்க விரும்பு கிறேன். வக்பு மசோதாவிற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானம் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது. எங்கள் நிலைப்பாடு இதுதான். தீர்மானத்தின் வரிகள் இவை:
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது!
“நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட வக்பு திருத்த மசோதா, சிறுபான்மையினர் உரிமைகள், மத சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது; வக்பு உருவாக்கப்பட்டதன் நோக்கத்திற்கு எதிரானது; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிரானது; தேவையற்றது மற்றுமின்றி குழப்பமானதும் கூட. இதை நிறைவேற்றி னால் வக்பு நிறுவனங்களை முடக்குவதுடன் இஸ்லாமிய சமூகத்திற்கு கேடுகள் விளையும். அதனால் தமிழ்நாடு சட்டப்பேரவை வக்பு திருத்த மசோதாவை கைவிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது”
நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குள்ளாக்கப்படும்!
அவைத் தலைவர் அவர்களே, மக்களின் அரசியல் மற்றும் நாட்டின் இறையாண்மையின் மாண்புகள் (Political Will and Sovereign Power) இந்த அவையில் பிரதிபலிப்பதுபோல் அல்லது பிரதி பலிப்பதாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் மாநில சட்டமன்றத்தில் பிரதிபலிக்கும் தமிழ்நாட்டின் அரசியல் விருப்ப மாண்பு முற்றிலும் வேறு மாதிரி உள்ளது! இந்தவேறுபாட்டையும் முற்றிலும் எதிர்மாறான கூறுகளையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றால், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், இந்த நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்கு உள்ளாக்கப்படும்; தயவுசெய்துஅதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
நாட்டின் சுதந்திரத்திற்கு பின் 1949இல் அரசியலமைப்பு சட்டம் உருவாகிக் கொண்டிருந்தபோது, உங்களுக்கு பிடித்த தலைவராக நீங்கள் தவறாக சித்தரித்துக் கொள்ளும் இந்தியாவின் இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் அரசியலமைப்பு நிர்ணய சபையில் சிறுபான்மையினருக்
கான ஆலோசனைக் குழுத் தலைவராக இருந்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். பட்டேல் அவர்கள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை வரையறுக்கும் குழுவின் தலைவராக இருந்தபோது, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் யார்? இந்திய ஜனாதிபதியாக பின்னாளில் வந்த அவைத்தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத், பின்னர் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர்அம்பேத்கர் மற்றும் டாக்டர் முன்ஷி. இதற்கு சர்தார் வல்லபாய் படேல் தலைமை தாங்கினார். குழு பரிந்துரைகளை வரையறுத்து ஒருஅறிக்கையை 1949 மே 25 அன்று அரசியலமைப்பு அவையில் கொண்டு வந்தது. அந்த அறிக்கையை முன்மொழிந்து பட்டேல் பேசியதை இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
“ஐந்து பேர் கொண்ட துணைக்குழுவை ஆலோசனைக்குழு நியமித்தது, அதில் நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதியும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார், பண்டிட்ஜவஹர்லால்நேரு, நான், முன்ஷி, மற்றும் டாக்டர். அம்பேத்கர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருந்தோம். குழு பிப்ரவரியில் கூடி அதன் அறிக்கையை வழங்கியது” என்று அவரே குறிப்பிட்டு விட்டு, அந்த அறிக்கைக்கான ஒப்புதலை பட்டேல் கோரியபோது, அவர் பேசிய சில வரிகள் மிகுந்த தொடர்புடையன. எனவே, அதனை இங்கே மேற்கோள்காட்ட விரும்புகிறேன்:
“விடுதலைக்குப்பின் நாட்டின் மாறிவரும் சூழ்நிலையில், மதச்சார்பற்ற அரசின் உண்மையான அடித்தளங்களைஅமைப்பது அனைவரின் நலனுக்காகவும் என்ற முடிவுக்கு அவர்கள், அதாவது முஸ்லிம்கள் உண்மையிலேயே நேர்மையாக வந்திருந்தால், பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தையும் நியாய உணர்வின் மீதும் நம்பிக்கை வைப்பதுதான் சிறுபான்மை யினருக்கு நன்மை பயக்கும்.” இது முதல் வரி! இதன் இரண்டாவது பகுதி மிகவும் முக்கியமானது; நான் மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்:
“பெரும்பான்மையினராக இருக்கும் நாமும் (இந்துக்கள்) சிறுபான்மையினர் என்ன உணர்கிறார்கள், அவர்கள் நடத்தப்படும் விதத்தில் நாம் நடத்தப்பட்டால் எப்படி உணருவோம் என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டும். ஆனால் சில காலத்திற்கு பிறகு, இந்தநாட்டில் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற வேறுபாடுகள் எல்லாம் மறந்து, இந்தியாவில் ஒரே ஒரு ‘இந்தியர்கள்’ என்ற சமூகம் மட்டுமே உள்ளது என்கிற எண்ணத்திற்கு வந்துவிடுவதே அனைவருக்கும் நல்லது. இதை கருத்தில் கொண்டு, ஆலோசனைக்குழுவின் அறிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று நான் இந்த அவையில் முன்மொழிகிறேன்.”
சர்தார் பட்டேலின் மரபை அழிக்க விரும்புகிறீர்கள்!
இதுதான் அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் குரலாக ஒலித்தது. நாம் அரசியலமைப்பின் 75வது ஆண்டை கொண்டாடுகிறோம். இவ்வாறு உரையாற்றிய நாங்கள் சர்தார் பட்டேலின் மரபை தொடர விரும்புகிறோம். அரசியலமைப்பில் சர்தார் பட்டேலின் மரபை தொடர விரும்பும் நாங்கள் மசோதாவை எதிர்க்கிறோம், ஆனால் வல்லபாய் பட்டேலின் சிலையை மட்டும் உருவாக்கிவிட்டு அவருடைய மரபை அழிக்க விரும்புகிற நீங்கள் இந்த மசோதாவை ஆதரிக்கிறீர்கள். இதுதான் வினோதம்!
அவைத் தலைவர் அவர்களே, இந்த வக்பு சட்டம் 1954இல் முதன்முதலில் இயற்றப்பட்டது.
அதன் பிறகு, 1959, 1964 மற்றும் 1969 இல் திருத்தப்பட்டது. பிறகு 1984இல் விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மாண்புமிகு அமைச்சர் மற்றும் முன்வரிசையில் உள்ள ஆளுங்கட்சியினருக்கு எனது கேள்வி என்னவென்றால், கடந்த காலங்களில் திருத்தங்கள் இந்த அவையில் கொண்டுவரப்பட்டபோதெல்லாம், அதற்கு ஒரு அடிப்படை (Basis) இருந்தது ; விவாதங்கள் இருந்தன; நாடாளுமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே அல்லது இந்திய ஜனாதிபதி அல்லது இந்திய பிரதமரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே தொடர்புடைய நிறுவனங்கள், அமைப்புகளுடன் ஆலோசனைகள் நடந்தன. 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்பு விசாரணைக்குழு சமர்ப்பித்த விரிவான அறிக்கையின்அடிப்படையில் வக்பு (திருத்தம்) சட்டம், 1984 நடைமுறைக்கு வந்தது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்கப்பட்டது!
1970 ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு, அதன்அறிக்கை 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்கப்பட்டது, அதன் அடிப்படையில் திருத்தங்கள் செய்யப்பட்டன. 1970 ஆம் ஆண்டின் ஆவணத்தைப் படித்தபோது எப்படிப்பட்ட ஒரு அருமையான மற்றும் விவேகமான விவாதம் இங்கே நடந்தது என நான்ஆச்சரியப்பட்டேன். அதையும் மீறி, 1970 ஆம் ஆண்டு வக்பு சட்டத் திருத்தங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன, பின்னர், 1984 ஆம் ஆண்டு அந்த திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. 1970-ல் இவ்வளவு பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தாலும், 1984-ல் நாடாளுமன்றம் இரண்டு திருத்தங்களை மட்டுமே நடைமுறைப்படுத்த முடிந்தது; ஒன்று வழக்கிடுவதற்கான கால வரம்பு (Limitation) குறித்தது. இது வக்பு சொத்துக்களுக்கு 30 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது; இரண்டாவது கைவிடப்பட்ட (Evacuee) சொத்துக்களுக்கும் கூட இச்சட்டம் பொருந்தும் என்பது. வேறு எந்த திருத்தங்களும் செயல்படுத்தப்படவில்லை; இந்துக்களின் எதிர்ப்பு காரணமாக அல்ல, மாறாக முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக! இது நேருவின் அரசாங்கத்தால் நியாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1995–ல் வக்ஃபு சட்டம் நடைமுறைக்கு வந்தது!
அதன்பிறகு, 1995 ஆம் ஆண்டு வக்பு சட்டம் திருத்தப்பட்டது. அமை/ச்சருக்கும் இந்த அவைக்கும் நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும்போதெல்லாம், நியாயமானஅடிப்படையில், சட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட அறிவுரைகைள் அடிப்படையில், திருத்தங்கள் செய்யப்பட்டன. உதாரணமாக, 1995 ஆம் ஆண்டு வக்பு சட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 1995 ஆம் ஆண்டு வக்பு சட்டம் எவ்வாறு நடைமுறைக்கு வந்தது? 1995 ஆம் ஆண்டு வக்பு சட்டத்தின்படி, ‘குறிக்கோள்கள் மற்றும் காரணங்களின்’ (Reasons and Objects) அறிக்கையின்பத்தி 2 இல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“வக்பு சட்டத்தில் விரிவானதிருத்தங்கள், வக்பு (திருத்தம்) சட்டம், 1984 முலம் செய்யப்பட்டன; அவை பெரும்பாலும் அனைத்து மட்டங்களிலும் வக்புகளின் நிர்வாகம் குறித்து விசாரிக்க டிசம்பர் 1970 இல் அமைக்கப்பட்ட வக்பு விசாரணைக்ககுழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் வக்பு (திருத்த) மசோதா மீதான விவாதத்தின் போது உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும்விதமாக இருந்தன.” இதன்படி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட 1995 ஆம் ஆண்டு வக்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அதேபோல் 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்பு சட்டத்தின் அடிப்படை என்ன? அச்சட்டத்தின் ‘காரணங்கள் மற்றும் நோக்கங்களின்’ பத்தி இரண்டை படியுங்கள்:
“இந்திய முஸ்லிம் சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகுறித்த விரிவான அறிக்கையைத் தயாரிப்பதற்காக ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது, அதன்அறிக்கையை நவம்பர் 17, 2006 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்தது, இது ‘சச்சார்குழு அறிக்கை’ என்றுஅழைக்கப்படுகிறது”
எனவே. 1984, 1995, 2013 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தங்கள் மூன்றிலுமே அடிப்படையான சட்டக் காரணங்கள் இருந்தன; விவாதங்கள் நடந்தன; பின்னர் ஒரு வெள்ளைஅறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. பின்னிட்டு, அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டு வந்தது. நான் கேட்கிறேன் தயவுசெய்து இந்தமசோதா எந்த அடிப்படையில் சபைக்குக் கொண்டுவரப்படுகிறது என்பதைச் சொல்லுங்கள்.
இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய அவசியமான காரணங்களை உங்களுக்கு வகுத்தளித்தது யார் என்று நீங்கள் கூற முடியுமா? எத்தனைஅமைப்புகள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் உங்கள் கூற்றுக்களை உறுதிப்படுத்தினர்? எவரும் இல்லை. எனவே, இந்த மசோதா கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட விதம் கள்ளத்தனமாகவும் கபடமும் கூடியதாக இருக்கிறது. தற்போதைய மசோதாவின் ‘நோக்கம் மற்றும் காரணங்களின்அறிக்கையின்’ பத்தி இரண்டு இவ்வாறு கூறுகிறது:
சச்சார் கமிட்டி அறிக்கை!
“ஓய்வுபெற்ற நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள், வக்பு மற்றும் மத்திய வக்பு கவுன்சில் மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவிள் ்அறிக்கையின்அடிப்படையில், மற்ற அமைப்புகளுடன் விரிவான ஆலோசனைக்குப்பிறகு, 2013 ஆம் ஆண்டில் சட்டத்தில் விரிவான திருத்தங்கள் செய்யப்பட்டன.” இதுஅரசாங்கத்தின்ஒப்புதல்!
பிறகு, அதே பத்தியில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
“அந்த திருத்தங்கள் இருந்தபோதிலும், வக்பு வாரியத்தின்அதிகாரங்கள் (Powers of State Boards), பதிவுசெய்தல் (Registration), சொத்துக்களின் கணக்கெடுப்பு (Survey of properties), ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் (Removal of encroachments), வக்பு வரையறை (Definition of Waqf) உள்ளிட்டவைகளில் உள்ள சிக்கல்களை திறம்பட நிவர்த்தி செய்ய சட்டம் இன்னும் செம்மைப்படுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐந்து கூறுகளை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். 2013 சட்டத்துடன் சச்சார் குழு அறிக்கை முந்தைய சட்டத்தில் விடுபட்டிருந்த ஐந்து கூறுகளை நீங்கள் மேற்கொள்ள விரும்பியதாக சொன்னீர்கள். இப்போது, இந்த ஐந்து கூறுகளுக்கு வருகிறேன்.
‘வக்ஃபு’ என நீங்கள் வரையறை செய்வது வக்ஃபு இல்லை!
‘வக்பு’ என நீங்கள் வரையறை செய்வது வக்பு இல்லை, மக்களை தந்திரமாக குழப்பு வதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை நான் எளிதாக நிரூபிக்கமுடியும். ‘ஆக்கிரமிப்பை அகற்றுதல்’ என்பது அரசாங்கம், வக்பு சொத்தை அபகரிக்க அரசுக்கு அதிகாரம் அளிப்பதைத் தவிர வேறில்லை. ‘சொத்துக்கள் அளவை கணக்கெடுப்பு’ என்பது ஒரு கேலிக்கூத்து. ஏனென்றால் இந்திய அரசு ஏற்கனவே 90 சதவீதத்திற்கும் அதிகமான வக்பு வாரிய சொத்துக்களை அளவை செய்து முடிந்துவிட்ட தாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
உங்கள் முயற்சியை தோலுரித்துக் காட்டுவேன்!
உங்கள் உரையின்படி, ‘வக்புபதிவு’ என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ‘மாநில வக்பு வாரியங்களின்அதிகாரங்களை’ மேம்படுத்துவது அதை ஒரு கேளிக்கை அரங்காக மாற்ற முயற்சிப்பது!. இந்த குற்றச்சாட்டு களின் மூலம் இங்கே உங்கள் முயற்சியை தோலுரித்துக் காட்டுவேன். ஒரு சட்ட மாணவனாக, இந்த சட்ட திருத்தங்களைக் கண்டபோது நான் வேதனையடைந்தேன்; மேலும் 2013 ஆம் ஆண்டு சட்டத்திற்கு அப்பால் இந்த ஐந்து தலைப்புகளின் அடிப்படையில் ஏதாவது ஒரு முன்னேற்றத்தை இந்த மசோதாவில் காட்டுமாறு அமைச்சரிடம் உரிய பணிவுடன் நான் சவால் விடுகிறேன். அவர்அவ்வாறு செய்தால், நான்அவரை வணங்கத் தயாராக இருப்பேன். ஆனால் நீங்கள் அதைச் செய்ய முடியாது; அது உங்கள் நோக்கம் அல்ல. நான் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் முறைகளை நான்அறிவேன். ஒருவழக்கறிஞராக, அதன்அனைத்து நுணுக்கங்களையும் நான் நன்குஅறிவேன்.
திருட்டுத்தனமாக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது!
1995 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் உரிய விவாதத்திற்குப் பிறகு, அதே நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் கொண்டுவரப்பட்ட நல்ல திருத்தங்களை நீக்குவதற்காக ‘தந்திரமாகவும்’ ‘அதிபுத்திசாலித்தனமாகவும்’ அதே நாடாளு மன்றத்தில் திருட்டுத்தனமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கேலிக்குரிய செயலை நீங்கள் எப்போதாவது கண்டிருக்கிறீர்களா?
நீங்கள் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், 2013 சட்டத் திருத்தத்தை ரத்து செய்திருக்க வேண்டும்!. 1995 சட்டத் திருத்தத்தை ரத்து செய்திருக்க வேண்டும். ஏனெனில் 1995 இல் கொண்டுவரப்பட்ட பெரும்பாலான திருத்தங்கள், பின்னர் 2013 இல் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் யாவும் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. அதற்கு இதே நாடாளுமன்றத்தை பயன்படுத்துகிறீர்கள்! நாடறிந்த சட்டவல்லுனரான நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணஐயரை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அவர் குறிப்பிட்டார் “நாடாளுமன்றம் என்பது தேசத்தின் ஒரு சிறந்த விசாரணை மையம் Inquest of the Nation), நிர்வாகத்தின் சிறந்த தணிக்கையாளர் (Auditor) மற்றும் குறைதீர்ப்பாளர் (Ombudsman), இறுதி நடுவர் (Final Orbitor), கொள்கை கண்காணிப்பாளர் (Policy Monitor) மற்றும் மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கலைஞர் Destiny designer)” அப்படிப்பட்ட நாடாளுமன்றம் இன்று வெறும் காற்றோட்ட மண்டபமாக (Ventilating Chamber) மட்டுமே உங்களால் பயன்படுத்தப்படுகிறது; குறை மதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது; என்று நான் அரசாங்கத்தை துணிவுடன் குற்றம்சாட்டுறேன். இது அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் மன்னிக்க முடியாத படுகொலைத் தாக்குதலேத் தவிர வேறில்லை; இதற்காக ஒருநாள், நீங்கள்வருந்துவீர்கள்!
இப்போது, மசோதாவின் புதிய சட்டப்பிரிவுகளை பற்றி ஆராய்வோம். திரிணாமுல் காரங்கிரஸ் கட்சியின் திரு. கல்யாண் பானர்ஜி, சமாஜவ்hதி கட்சியின் தலைவர் திரு.அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எனது நண்பர்கள், “குறைந்தது ஐந்து வருடங்களாக இஸ்லாமியத்தை கடைப்பிடிக்கும் ஒருவர்தான் வக்பு அமைப்பை ஏற்படுத்த – நிர்வகிக்க தகுதியானவர்” என்ற விதியைப்பற்றி குறிப்பிட்டனர். அதுமட்டுமல்ல, யாரும் ‘குறுக்குவழித் தந்திரத்தில்’ Contrivance) ஈடுபட்டிருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களிடம் இந்த ‘சொல்லாடல்கள்’ எல்லாம் எங்கிருந்து வந்தது? நான் சட்டப்படியான ஒரு இந்து. நான் ஒரு மத நம்பிக்கையானவனாக இருக்கலாம், மத நம்பிக்கையற்றவனாகவும் இருக்கலாம். ஆனால் என்னிடத்தில் ஒரு சொத்தை ஒப்படைக்கும்போது, என் நேர்மையை நீங்கள்அளவிடுவீர்களா? என் மத நம்பிக்கையை அளவிடுவீர்களா? நான் நேர்மையைப் பற்றி அக்கறை இல்லாத ஒரு மோசடி செய்பவன் என்றால், அதை ஏற்பீர்களா? நீங்கள் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. நீங்கள் மதத்தைப்பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள். அதுதான் உங்கள் பிரச்சனை. வேறு எந்த நாட்டின் சட்டத்திலும் இதுபோன்ற ஒருவிதியை நான்பார்த்ததில்லை. ஒருவரின் நேர்மையை நீங்கள் எப்படி மத அடிப்படையில் அளவிட முடியும்?
(குறுக்கீடுகள்)
தயாநிதி மாறன்: (மத்திய சென்னை எம்.பி): பேரவைத் தலைவர் அவர்களே, அதிக குறுக்கீடுகள் உள்ளன. நாடாளுமன்ற கூட்டுக்குழு வில்கூட அவரால் பேசமுடியவில்லை.
(குறுக்கீடுகள்)
ஆ.இராசா: அரசாங்கம் தொடங்கியிருக்கும் இந்த சட்டத்திருத்த முயற்சியில் கெட்ட உள்நோக்கம் இல்லை என நீங்கள் கூறினீர்கள்; ஆனால் உங்கள் முழு முயற்சியும், ஒரு கொடூரமான திட்டமிட்ட சூழ்ச்சி (Diabolical contrivance), அருவருப்பானது என்பதைத்தவிர வேறில்லை என்று நான் குற்றம் சாட்டுகிறேன். பிறகு நீங்கள் சில புதிய வாக்கியங்களைச் இந்த சட்டத்திருத்தத்தின் பிரிவு 3ஏ வில் சேர்த்துள்ளீர்கள். உண்மையான மற்றும் அசல் உரிமையாளர் ஒருவர் மட்டுமே தன் சொத்தை ‘வக்பு’க்கு தானம் செய்ய முடியும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இது என்ன நகைப்பாக இல்லையா? உரிமையாளர் மட்டுமே சொத்துக்களை விற்க - மாற்ற முடியும். உரிமை அல்லாத ஒருவர் சொத்தை மாற்றினால், அது மாற்றமாகாது, அது சட்டப்படி செல்லாது. நான் என் சொந்த பணத்தை செலவிட முடியும், ஆனால் நான் என் நண்பனிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டால், அது திருட்டுத்தனமானது. நீங்கள் ஏன் இப்படி ஒரு சட்டப்பிரிவைக் கொண்டு வருகிறீர்கள்? எனக்கு அதைப்புரிந்து கொள்ள முடிய வில்லை. (சிரிப்பலை)
(குறுக்கீடுகள்)
அவை தலைவர் அவர்களே, இந்த மசோதாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் அனைத்தும் சிக்கலானவை. அவைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மசோதாவின் பிரிவு 3சி கூறுகிறது, இந்தச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வக்பு சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்க சொத்தும் வக்பு சொத்தாகக் கருதப்படாது” என்று. இந்த அவையில் எத்தனை வழக்கறிஞர்கள் உள்ளனர் என்பது எனக்குத்தெரியாது. அரசாங்க சொத்து எவ்வாறு வக்பு சொத்தாக அறிவிக்கப்
பட்டிருக்க முடியும்? அதை யார்அடையாளம் காட்டுவார்கள்? யார்அறிவிப்பார்கள்? யார் விசாரிப்பார்கள்? எதுவும் தெளிவாக இல்லை; ஆனால் நீங்கள் அறிவிப்பீர்கள் இந்தச் சொத்தை அரசினுடையது என்று. அரசாங்கம் அடையாளம் காண்பிக்கும்! அதற்குமேல் அதை வக்பு சொத்தாகக் கருதப்படாது.
இது மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள தன்னிச்சையான சிறப்பு அதிகாரம் ! நிச்சயமாக, அனைத்து அரசியலமைப்பு அமைப்புகளுக்கும் சில தன்னிச்சையான உரிமை (Discretionary power) உள்ளது. நீதியரசர் பதஞ்சலி 1960 களில் கூறினார்: ஆம், எங்களுக்கு நீதித்துறையில் சில தன்னிச்சையான உரிமை உள்ளது; ஆனால் அது ஒரு குகை மனிதனின் உரிமையாக (Caveman discretion) இருக்கக்கூடாது”. இங்கே உங்கள் தன்னிச்சை உரிமை ஒரு குகை மனிதனின் உரிமை!. சட்டத்தை செம்மைப் படுத்துகிறோம் என்ற பெயரில், அரசாங்கம் வக்பு என்ற கருத்தை தோற்கடிக்க முயற்சி செய்கிறது, சட்டத்தின் பெயரில் முழு வக்பு சொத்துக்களையும் அரசாங்கம் இசுலாமியர்களிடமிருந்து பறிக்க நினைக்கிறது !.
ஒரு ஆட்சியர் தனது வழக்கை
தானே நீதிபதியாக இருந்து விசாரிக்க முடியுமா?
இரண்டாவதாக, ‘வக்பு சொத்துக்களின் கணக்கெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல்’ பற்றிய பிரிவுகளில் நிறைய முரண்பாடடுகள் உள்ளன. சொத்தின் கணக்கெடுப்பை உறுதிப்படுத்துவதும்; வக்பு சொத்தின் ஆக்கிரமிப்பு அகற்றுவதும் எதிர்மறையானது. அதை ஒன்றாக இணைக்க நீங்கள் விரும்புகிறீர்கள். தற்போதைய சட்டத்தில் பிரிவு 4 இல் வக்பு சொத்தை கணக்கெடுப்ப தற்கான ஒரு ஏற்பாடு உள்ளது. அரசாங்கத்தைச் சாராத ஒரு தன்னுரிமை கொண்ட அளவை ஆணையர் (Independent Survey Commissioner) இச்சட்டத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு அரசுக்கு கட்டுப்பட்ட அதிகாரி அல்ல. அரசாங்கத்திற்கும் வக்பு வாரியத்திற்கும் ஒரு தகராறு வரும்போது, அவர்களின் உரிமைகளை விசாரித்து ஒரு முடிவுக்கு வர உரிமையியல் நடைமுறைச் சட்டத்தை (Civil Procedure Code)பின்பற்றி நடக்கும் ஒரு சார்பற்ற அதிகாரி ஆவார். அவர் ஒரு உரிமையியல் நீதிமன்றமாகவே (Civil Court) செயல்பட வேண்டும்.
இப்போது, இந்த திருத்தத்தில் நில அளவை ஆணையருக்கு பதில் ‘மாவட்டஆட்சியர்’ (Collector) பணியமர்த்தப்பட்டுள்ளார். எனது கேள்வி இதுதான். வக்பு வாரியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான எந்தவொரு தகராறிலும், ஒரு ஆட்சியர் எப்படி நீதிபதியாக இருக்கமுடியும் ? இயற்கை நீதியின் (Natural Justice) கொள்கை உங்களுக்குத் தெரியுமா? யாரும் தங்கள் சொந்த விஷயத்தில் தாங்களே நீதிபதியாக இருக்க முடியாது (No one can be a judge for his own cause). அதே ஆட்சியர் அமர்ந்து சொத்தின் உரிமையாளர் அரசாங்கமா அல்லது வக்பு வாரியமா என்பதை முடிவு செய்கிறார். இது சட்ட முறை (Jurisprudence) அறியாதது, எதிரானது. சட்டத்துறையினரும் ஏற்காத ஒன்று. ஒரு ஆட்சியர் தன் வழக்கை தானே நீதிபதியாக இருந்து எவ்வாறு விசாரிக்க முடியும்?
இந்த மசோதா ஆக்கிரமிப்பை
மீண்டும் ஆய்வு செய்ய விரும்புகிறது!
அடுத்து, இந்த மசோதா ஆக்கிரமிப்பை மீண்டும் ஆய்வு செய்ய விரும்புகிறது. நில அளவை கணக்கெடுப்பு முடிந்து விட்டது; இப்போது அடுத்ததாக ஆக்கிரமிப்புக்கு வருகிறது. நீங்கள் இச்சட்ட முன்வடிவின் ‘நோக்கங்கள் மற்றும் காரணங்கள்’ (Reasons and Objects) அடிப்படையில் ஆக்கிரமிப்பை மீண்டும் ஆய்வு செய்ய விரும்புவதாக குறிப்பிட்டீர்கள். ஆனால், வக்பு சட்டம் பிரிவு 54 ஆக்கிரமிப்பை குறிக்கிறது, தயவு செய்து மசோதாவை பாருங்கள். ஒரு சிறிய மாற்றம் இப்பிரிவில் கொண்டு வரப்பட்டுள்ளதா? நீங்கள் பிரிவு 54 இல் ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளியைகூட மாற்றவில்லை. ஆனால் நீங்கள் ‘நோக்கங்கள் மற்றும் காரணங்கள்’ என்று சொல்லும்போது இந்த மசோதாவில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்று கூறுகிறீர்கள். அதற்கு முற்றிலும் மாறாக, எனது நண்பர் கூறியபடி, நீங்கள் நாட்டின் சிறுபான்மையினர்களுக்காக கடுமையான சட்டங்களை உருவாக்க விரும்புகிறீர்கள். ஆனால் உங்கள் கூற்றில் சிறிதும் உண்மை இல்லை.
தீர்ப்பாயங்களைப் பற்றிக்
குறிப்பிட விரும்புகிறேன்!
ஏனெனில், தற்போதைய சட்டத்தின்படி வக்பு சொத்துகளுக்கு எதிராக குற்றமிழைத்தால் ‘கடுமையான சிறை மற்றும் அபராதத்தை’ (Rigorous imprisonment and penalty) விதிக்கவல்லது. நீங்கள் இதனை ‘எளிமையான சிறைதண்டனை’ (Simple imprisonment) என்று மாற்றியுள்ளீர்கள். தற்போது இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட குற்றம் உடனடியாக புலன் விசாரணை நடவடிக்கை எடுக்கத்தக்க மற்றும் பிணையில் வெளிவர முடியாததாக (Cognizable and non bailable) இருக்கின்றது . நீங்கள் அதை பிணை வழங்கும் வகையில் (Bailable) மாற்றி அப்பிரிவை நீர்த்துப் போகச் செய்துள்ளீர்கள்!
நான் தீர்ப்பாயங்களை (Tribunal) பற்றி குறிப்பிட விரும்புகிறேன். ஒரு வழக்கறிஞராக, நான் மீண்டும் கூறுகிறேன்; நீதிமன்றங்களை உரிமையியல், உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் என பிரித்துள்ளோம். நீதிமன்றங்களின் நீண்ட தாமதப்படுத்தும் விசாரணை வழக்கங்களை தவிர்க்கவே நாம் தீர்ப்பாயங்களை உருவாக்கி யிருக்கிறோம். நாம் பல தீர்ப்பாயங்களை கொண்டுள்ளோம். தொலைத் தொடர்பு தீர்ப்பாயம் உள்ளது. வருமான வரி தீர்ப்பாயம் உள்ளது. காரணம் என்ன? உரிமையியல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், கீழ் நிலை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பல வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. இந்த தனித்த சிறப்பான துறைகளின் வழக்குகளை தீர்க்கவும், கால நீட்டிப்பு சவால்களை தீர்க்கவும் குறிப்பிட்ட தீர்ப்பாயங்களை நிறுவப்பட வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில்தான், அரசியலமைப்பு சட்டம் தீர்ப்பாயங்களை உருவாக்க அனுமதிக்கின்றது.
இச்சட்டத்தில் ஏற்கனவே, ஒரு தீர்ப்பாயத்தை உருவாக்கி, அதன் தீர்ப்புதான் இறுதி (Tribunal decision is final) என்று தெளிவாக சட்டத்தில் உள்ளது. ஏன் அது இறுதியாக இருக்க வேண்டும்? ஏற்கனவே நில அளவை ஆணையர், உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகாரங்களை பெற்றுள்ளார். அவர் தனிப்பட்ட நபர் அல்ல. அவர் சட்டத்தின் கீழ் ஒரு நீதி நிறுவனம். அவர் உரிமையியல் சட்ட விதிகளின்படி (CPC) மற்றும் பழைய இந்திய சாட்சிய சட்டப்படியும் அவைகளை பின்பற்றி தீர்ப்பளிக்கிறார்; எனவே, நில அளவையரே முதல் முதல் நீதிமன்றம். இரண்டாவது, மேல் முறையீடு செய்ய இந்த தீர்ப்பாயங்கள் உள்ளன. மூன்றாவது, சீராய்வு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அது உயர் நீதிமன்றங்களுக்கு செல்ல முடியும். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
(குறுக்கீடுகள்)
ஆனால் நீங்கள் தீர்ப்பாயம் சொல்வது இறுதி அல்ல என்கிறீர்கள் என்றால் என்ன வகையான சட்டவியல் நடைமுறைகளை (Jurisprudence) நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? இப்போது, வக்பு அமைப்புகளை பதிவு செய்வதில் உள்ள பிரச்சினையை பிரிவு 36(1) இல் காணலாம். முன்னர், வக்பு சொத்துக்கள், உரிய விசாரணைக்குப் பிறகு, 36(1) பிரிவின்படி வக்பு சொத்தாக அறிவிக்கப்படலாம். அந்த செயல்முறை என்ன என்பதை தெளிவாக இச்சட்டத்தில் ஏற்கனவே உள்ளது. இப்போது, நீங்கள் அதில் உட்பிரிவு 7ஏ பிரிவை கொண்டு வர விரும்புகிறீர்கள். 7ஏ பிரிவு என்ன கூறுகிறது? இது ஒரு தனித்துவமான பிரிவு, இது அனைத்து வக்பு சொத்துக்களையும் அழிப்பதாக இருக்கும். தயவு செய்து எனக்கு 7ஏ பிரிவை வாசிக்க அனுமதி அளியுங்கள்.
வக்பு சொத்தின் மீது இருக்கும் பிரச்சனையை ஒரு தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் தீர்க்கப்டும்வரை, அந்த சொத்தை வக்பு வாரிய சொத்தாக பதிவு செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வக்பு சொத்தாக ஒரு சொத்தை பதிவு செய்யும் முறையில், எந்தவொரு பிரச்சினையும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிய வந்தால், அதில் இறுதி முடிவு எடுக்கப்படாது. அது நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படும், அதுவரை, அது அரசின் சொத்தாகவே இருக்கும். பின்பு, 10ஆம் உப பிரிவு கூறுகிறது, இந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வழக்கோ, மேல் முறையீடோ செய்ய முடியாது என்று !. இதன் பொருள் என்ன ? வக்பு சொத்தில் பிரச்சினை இருந்தால் வழக்கு உச்ச நீதிமன்றம் வரையில் செல்லும். தீர்ப்பிற்கு 30 ஆண்டுகள் ஆகும். அதுவரையில் அந்த சொத்து அரசின் சொத்தாகக் கருதப்படும். இதன் பொருள் என்ன? வக்பு வாரிய சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ளப்போகிறது. அதேபோல் பதிவு செய்யும் முறையும் உள்ளபடியே மிகவும் கடினமாக இருக்கின்றது.
எங்களுக்குப் பாடம் கற்பிக்காதீர்கள்!
வக்பு வாரியங்களின் அமைப்பை (Boards) பொருத்தவரை இஸ்லாமியர் அல்லாதவர்களை எதற்காக உள்ளே உறுப்பினராக கொண்டு வந்துள்ளீர்கள்? தமிழ்நாடு உள்படஅனைத்து மாநிலங்களிலும், இந்து அறநிலையத் துறை உள்ளது. தமிழ்நாட்டில் என்ன நடந்தது? ஒரு கோவிலில், அறநிலையத்துறையின் உள்ள பல ஏக்கர் நிலம் மூலம் வந்த வருமானத்திலிருந்து, அறநிலையத்துறை ஒரு கலைக் கல்லூரி நடத்த முடிவு செய்தது. பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டபோது ஒரு இஸ்லாமியர் தகுதி அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனி அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது: இது இந்துக்கள் சொத்து. நீங்கள் ஏன் ஒரு இஸ்லாமிய பேராசிரியரை அமர்த்துகிறீர்கள் ?” என்று!. இப்போது, சொத்தும் மதமும் வேறு வேறு என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். அதேபோல் மதமும் அரசியலும் வேறு வேறு ; இரண்டையும் கலக்காதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம். தயவு செய்து எங்களுக்கு பாடம் கற்பிக்காதீர்கள். இந்த நாட்டை மதசார்பற்ற ஒருமைப்பாடு கொண்டதாக பேணிட அரசியலை மதத்திலிருந்து பிரித்து விடுங்கள்.
இப்போது, மசோதாவின் 40ஆம் பிரிவு மிகவும் முக்கியமானது. இந்திய அறக்கட்டளைகள் சட்டம் (Trust Act) அல்லது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (Societies Registration Act) கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு சொத்து அது வக்பு சொத்தாக இருப்பதாக தெரிய நேரிட்டால், வாரியம் அந்த சொத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்டு , அது வக்பு சொத்து என முடிவு செய்யலாம். இந்த விதியை நீக்குவதன் காரணம் என்ன ? நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இது குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படாதபோது நீக்குவதற்கான அதிகாரத்தை யார் அளித்தார்கள் ?
இறுதியாக, பிரிவு 108(ஏ) வக்பு வாரிய சட்டத்திற்கான சிறப்பு மற்றும் கட்டுப்படுத்த முடியாத (Over riding powers) அதிகாரம் குறித்து பேசுகிறது. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) அல்லது வரதட்சணை தடைச் சட்டம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், இவைகளைப் போல் சிறப்புச் சட்டங்கள் (Special Legislation) இயற்றப்படுவது குறிப்பிட்ட உரிமைகள் மறுதலிக்கவல்ல பிரிவுகளை பாதுகாக்க இதுபோன்ற சட்டங்களை சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டால், மற்ற சட்டங்கள் அவற்றை கட்டுப்படுத்த கூடாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க இப்படிப்பட்ட சிறப்பு அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால், நீங்கள்அதை நீக்குகிறீர்கள்.
அன்றே பிரதமர் நேரு எச்சரித்தார்!
நிறைவாக, உங்களுக்கு கவனப்படுத்துகிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு, அப்போதைய இந்தியாவின் பிரதமர்அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார். அப்போதைய பிரதமர் முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தின் அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்:
தனியார் இராணுவத்தின் இயல்பில் இருக்கும் ஒரு அமைப்பு, நிச்சயமாக கடுமையான நாஜிவழிகளைப் பின்பற்றுகிறது, நாஜி அமைப்பின் நுட்பத்தைப் பின்பற்றுகிறது என்பதற்கு எங்களிடம் ஏராளமான சான்றுகள் உள்ளன. நாஜிகட்சி ஜெர்மனியை அழிவுக்கு இட்டுச் சென்றது. இந்தப் போக்குகள் இந்தியாவில் பரவி அதிகரிக்க அனுமதிக்கப்பட்டால், அவை இந்தியாவுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்றாலும் இந்தியா உயிர்ப்போடு நிற்கும்! என அய்யமின்றி நம்பலாம். ஆனால் இந்தியா மோசமான காயங்களை அடைந்திருக்கும்; மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்.” என எச்சரித்தார் தேசத்தின் பிரதமர் 1948 ல் !
யார் அந்த பிரதமர் ? அது பண்டிட் ஜவஹர்லால் நேரு!.
எந்த அமைப்பை பற்றி சொன்னார் ? ஆர்.எஸ்.எஸ்!
இந்தஅரசாங்கத்தை நான் எச்சரிக்கிறேன், ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து பயணிக்காதீர்கள்; தேசத்திற்கு நல்லதல்ல. நன்றி.
இவ்வாறு ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்
Comments
Post a Comment