அஜ்மீர் ஷெரீப் தர்கா மீதான சங்பரிவாரின் உரிமைகோரல்:நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்! - எஸ்டிபிஐ கண்டனம்
அஜ்மீர் ஷெரீப் தர்கா மீதான சங்பரிவாரின் உரிமைகோரல்:
நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்! - எஸ்டிபிஐ கண்டனம்
----------------------------
இந்தியாவில் மத ஒற்றுமையை மேம்படுத்துவதில் பல நூற்றாண்டுகள் பழமையான அஜ்மீர் ஷெரீப் தர்காவின் வரலாற்று முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷஃபி, இந்துத்துவா வெறியர்களின் அஜ்மீர் தர்கா மீதான உரிமை கோரலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஜ்மீரில் உள்ள தர்கா ஷெரீப்பில் எஸ்டிபிஐ கட்சி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 1719 முதல் 1947 வரையிலான மராத்தியர்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் சிந்தியாக்கள் போன்ற முஸ்லீம் அல்லாத ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்று, மத மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக அஜ்மீர் தர்கா எப்போதும் இருந்து வருகிறது என்பதை எடுத்துரைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட தர்காவின் புனிதத்தை அங்கீகரித்து மதித்தார்கள்.
அஜ்மீர் ஷெரீப் தர்காவின் புனிதம் யார் ஆட்சியில் இருந்தாலும் யாராலும் கேள்வி கேட்கப்படவில்லை. ஆனால் பிரதமர் மோடியின் காலத்தில் அஜ்மீர் ஷெரீப் தர்காவின் புனிதத்தன்மை கேள்விக்குறியாகி வருவதாக குறிப்பிட்டார். இதுபோன்ற அழிவு சக்திகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், நாட்டின் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இத்தகைய முயற்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்படுகிறது எனவும் அவர் கவலை தெரிவித்தார்.
அஜ்மீர் ஷெரீப் தர்காவை ஆய்வு செய்யும் சர்வேக்கான மனுக்களை ஏற்றுக்கொண்ட அல்லது முஸ்லிம் மத ஸ்தலங்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கிய கீழ் நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை அவர் வலியுறுத்தினார். இந்த தலங்களின் புனிதத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
சன்விதான் சுரக்ஷா அந்தோலனின் செயலாளரும் இந்திய பௌத்த சங்கத்தின் தேசியத் தலைவருமான ராஜ்ரதன் அம்பேத்கர், மசூதிகள் மற்றும் கோயில்கள் ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்தபடியே இருக்க வேண்டும் என்று வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஆணையிடுகிறது. இதன்படி மசூதி மசூதியாகவே இருக்கும் என்பது போல, கோவிலும் கோவிலாகவே என்பது உள்ளடக்கம். ஆனால், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை பொருட்படுத்தாமல் நீதிமன்றம் மசூதிகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிப்பது என்பது இந்திய அரசியலமைப்பை மீறுவதாகும். நீதிமன்றங்கள் இந்த போக்கை தொடர்ந்தால், கோவில்களை ஆய்வுசெய்ய இந்திய பௌத்த சங்கம் கோரும் என்றும் எச்சரித்த அவர், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ சன்விதான் சுரக்ஷா அந்தோலன் ஏற்றுக்கொள்கிறது என்பதால், அத்தகைய கணக்கெடுப்பைக் தாங்கள் கோரப் போவதில்லை என்று கூறினார்.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் யாஸ்மீன் ஃபரூக்கி, தர்காவை ஆய்வு செய்வதற்கான மனு அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு சவால் விடுவதாகக் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் ராஜஸ்தான் மாநில தலைவர் அஷ்பக் ஹுசைனும் கலந்து கொண்டார்.
Comments
Post a Comment